Saturday, 5 September 2020

குருவின் சேர்க்கை

குருவின் சேர்க்கை

அறிவு இயக்கமற்ற நிலையிலே உள்ள இருப்பு நிலைக்குப் போகும் அளவுக்கு நுண்மை பெற்றபோது அதுவும், பிரம்மம் (ஆதி) என்ற ஒரு நிலையம் ஒன்றுபட, அந்த இடத்தில் அறிவு அசைவற்று நின்று, ஆதியும் அறிவும் ஒன்றாகி விடுகிறது. அந்த குறிப்பைத்தான் சமம் + ஆதி = சமாதி என்று சொல்வார்கள். ஆதிக்குச் சமமாக அறிவு நிற்கும் நிலைதான் 'சமாதி'. இந்த நான்கையும் மனோபயிற்சியாக, பதஞ்சலி யோக சூத்திரத்தில் சொல்வார்கள். நாம் "மனவளக்கலை" என்கிறோம்.

உயிர் மேலே எழுப்பப்பட வேண்டும். அதன் இயக்கத்தை, இயக்க மையத்தை மாற்றியமைக்க வேண்டும். அதுவே யோகத்திற்கு முதல் படியாகும். அதற்கென நீண்ட காலம் செலவிட முடியாது. நாம் "உலக சமுதாய சேவா சங்கத்தின்" மூலமாகக் "குண்டலினியோகத்தை" வெகு எளிமையாக்கி விட்டோம். மூச்சுப் பயிற்சி வேண்டியது இல்லை. மந்திர ஜெபம் தேவை இல்லை. முதலிலேயே அந்தப் பயிற்சியில் ஈடுபட்டவர்கள் போதிய ஆற்றல் பெற்றிருக்கிறார்கள். அந்த ஆற்றலைக் கொண்டு மூலாதாரத்தில் தொட்டு, மேலே கொண்டு வந்து நிறுத்தி விடுகிறார்கள். இதை ஸ்பரிச தீட்சை என்று சொல்வார்கள். தொட்டு உணர்த்திய உடனே, பயிற்சியாளர் குருவின் ஆற்றல் மூலம் தனது உயிராற்றலை உணர்கிறார் (the life force of the aspirant responses to the life force of the master) அதுதான் உண்மை.

குருவே வந்து, உயிர்ச்சக்தியைக் கொடுத்து விடுகிறாரா என்றால் இல்லை. தூண்டி விடுகிறார். தன்னுடைய ஆற்றலைச் சிறிது பாய்ச்சி, அதை வேகம் கொள்ளச் செய்து தூண்டிவிடுவது (Stimulate) தான் குருவின் ஆற்றல். ஆனால் தூண்டும் போது 'பாலுக்கு உரை ஊற்றுவது' போல, குருவினுடைய தன்மையையும் அடைகிறது. அறிவில் முழுமை பெற வேண்டும் என்ற எண்ணமும், இறைநிலையை அடைய வேண்டும் என்ற ஒரு பொறுப்பும் வர வேண்டுமானால் அதற்கு உயிர் அறிந்தவர்களுடைய உயிர் (தீட்சை) சேர வேண்டும். குருவின் உயிர்ச்சக்தியும் சிறிது சேரும்போது தான் உடலோடு எடுத்த பிறவி மாத்திரம் அல்லாது, அறிவுக்கு ஒரு பிறவியும் உணடாகி விடுகிறது.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

No comments: